Last Updated : 03 Jun, 2020 03:05 PM

 

Published : 03 Jun 2020 03:05 PM
Last Updated : 03 Jun 2020 03:05 PM

தமிழ்நாடு மாணவர் சேர்க்கை நடைமுறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மசோதா நிறைவேற்றுக; கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

பிரின்ஸ் கஜேந்திர பாபு: கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு மாணவர் சேர்க்கை நடைமுறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என சட்டமசோதா நிறைவேற்ற வேண்டும் என, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக சார்பிலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் ஒதுக்க கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகவும், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் முறையாக நடைபெறாததால், அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் திருப்பதி, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, "நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னவானது? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற அறிவிப்புச் செய்தால், பெரும்பாலான பணக்காரர்கள் 10-ம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டத்திலும், மேல்நிலைக் கல்வியை அரசுப் பள்ளியிலும் பயின்று இட ஒதுக்கீட்டை பறிக்க நேரிடும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசு அமைத்துள்ள ஆய்வுக் குழுவும் கண் துடைப்பே.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நிலைக்குழு தன்னுடைய 92-வது அறிக்கையில், மருத்துவத்திற்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தும்போது, எந்தெந்த மாநிலங்கள் அதில் பங்கேற்க விருப்பமில்லையோ அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும், பின்னாளில் அந்த மாநிலங்கள் விரும்பும்பட்சத்தில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வாய்ப்பு அளிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் அதிமுக முன்னாள் உறுப்பினர் காமராஜ் தனது எதிர்ப்பை எழுத்து மூலமாக பதிவு செய்திருக்கிறார்.

கல்வி மத்திய அரசின் பட்டியலிலோ, மாநில அரசின் பட்டியலிலோ இல்லாமல் பொதுப்பட்டியலில் தான் உள்ளது. ஆகவே 92-வது அறிக்கையின்படி, நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வாய்ப்புண்டு என்பதை தெளிவாகிறது. அதனால் மாநில அரசு தமிழ்நாடு மாணவர் சேர்க்கை நடைமுறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவோம் என சட்டமசோதா நிறைவேற்றி அனுப்புவது தான் தீர்வு. அதைவிடுத்து இடஒதுக்கீடு என்ற பேசுவதெல்லாம் போகாத ஊருக்கான வழி தேடுவது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x