Published : 03 Jun 2020 09:26 AM
Last Updated : 03 Jun 2020 09:26 AM

பருவக்காற்றாலும், கடல் கொந்தளிப்பாலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை; வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

பருவக்காற்றாலும், கடல் கொந்தளிப்பாலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் பாதிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கை:

"இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்தது. இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் விவேகானந்தர் நினைவுச்சின்னம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தன்னம்பிக்கையோடு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்.

அது மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற இருக்கும் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியோடு இருந்தவர். இதன் காரணமாக 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு தமது ஆன்மிகப் பேச்சாற்றலால் இந்தியாவின் ஆன்மிகப் பெருமையை உலகம் அறியச் செய்து புகழ் பெற்றவர் விவேகானந்தர்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய போது கால் பதித்தது ராமேஸ்வரம் தனுஷ்கோடி துறைமுகத்தில் தான். அவரை வரவேற்று பெருமை சேர்த்தவர் அப்போதைய ராமநாதபுர மன்னர். அத்தகைய ஆன்மிக மேதை விவேகானந்தரின் நினைவை போற்றும் வகையில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவப்பட்டது பெருமைக்குரியது.

தற்போது வீசும் பருவக்காற்றாலும், கடல் கொந்தளிப்பாலும் பெரும் அலைகள் எழுந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அரிப்பு உள்வாங்கி வருகிறது. இது தொடர்ந்தால் நினைவு மண்டபம் பலவீனமாகி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு துறையினர் நினைவு மண்டபத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். தகுந்த தடுப்பு அணையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு தொடர்புடைய துறை தலைவர்கள் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழக அரசு விவேகானந்தர் நினைவு மண்டபம் பாதிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x