

முன்பணம் செலுத்தியும் தரைவழி தொலைபேசி இணைப்பு வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தொகையை மாநில நுகர்வோர் குறைதீர் மன்றக் கிளை உறுதி செய்துள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரம்ம நாயகம் என்ற பிரம்மா. இவர் வீட்டிற்கு தரைவழி தொலைபேசி இணைப்பு பெற நெல்லை வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 30.12.2015-ல் ரூ.500 முன்பணம் செலுத்தினார்.
50 நாள் கடந்தும் இணைப்பு வழங்காததால் இழப்பீடு கேட்டு நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முன்பணம் செலுத்தி 7 நாளுக்குள் இணைப்பு வழங்காதது சேவை குறைபாடு. இதனால் மனுதாரருக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்க என மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம் 11.9.2018-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பிஎஸ்என்எல் நிறுவனம் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற கிளையில் மேல்முறையீடு செய்தது.
இதனை நீதிபதி ராஜசேகர், உறுப்பினர் முருகேசன் ஆகியோர் விசாரித்து, நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நெல்லை வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் பொதுமேலாளர் மற்றும் சப்-டிவிஷன் பொறியாளர் ஆகியோர் ரூ.8 ஆயிரம், அதற்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என்று கூறி பிஎஸ்என்எல் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.