Published : 02 Jun 2020 09:42 PM
Last Updated : 02 Jun 2020 09:42 PM

நியாயவிலைக் கடைகளில் அரிசி விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கோவில்பட்டியில் உள்ள நியாய விலைக்கடைகளில் இலவச அரிசி விநியோகத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி நகரில் உள்ள பல நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அரிசி வழங்கப்படவில்லை.

குடும்ப அட்டைதாரர்கள் அரிசி வாங்காமலேயே அரிசி வாங்கிவிட்டதாக அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரிடம் கேட்டால், நீங்கள் அரிசி வாங்கி விட்டீர்கள், உங்களுக்கு இனி அரிசி கிடையாது என்று மிரட்டி அனுப்பி விடுகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்கப்படக்கூடாது என தமிழக அரசு விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை முறையாக மக்களுக்கு வழங்காமல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் அதனை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். ஏழைகள் பலருக்கு அரிசி வழங்க மறுத்து விரட்டி விடுகின்றனர்.

எனவே, வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விலையில்லா அரிசி விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x