Last Updated : 02 Jun, 2020 01:27 PM

 

Published : 02 Jun 2020 01:27 PM
Last Updated : 02 Jun 2020 01:27 PM

புதுச்சேரியில் நிலப்பிரச்சினையில் போலீஸாரை குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகைக்கு தீக்குளிக்க வந்த குடும்பம்; ஆண்கள் கைதால் ஜீப்பை மறித்த பெண்கள்

நிலப்பிரச்சினையில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் இருப்பதாக குற்றம்சாட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சந்தை புது குப்பம் கிராமத்தில் வசிப்பவர் அருள். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் ஏற்கெனவே அவரது சகோதரர்கள் ஐந்து பேர் வீடு கட்டி உள்ளனர். ஆறாவதாக அருள் வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, பாமக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருள்முருகன் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் வந்து இடம் தனக்கு சொந்தமானது என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. போலிப் பத்திரம் மூலம் தங்களது இடங்களை இவர்கள் அபகரிக்க முயற்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி அருள் மற்றும் அவரது குடும்பத்தார் காவல் நிலையத்திற்கும் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றனர்.

இந்த தடையை மீறி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அவரது ஆட்களும் தங்களின் இடத்திற்குள் நுழைந்து தகராறில் ஈடுபடுவதாக அருள் குடும்பத்தினர் தெரிவித்து தங்களுக்கு நீதி வழங்கக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்கும் போராட்டத்தை இன்று (ஜூன் 2) நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆளுநர் மாளிகைக்கு குடும்பத்தோடு வந்த அவர்களை ரங்கப்பிள்ளை வீதியில் மடக்கிப்பிடித்து போலீஸார் கைது செய்தனர். அருள் மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து ஜீப்பில் ஏற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்ப பெண்கள் ஜீப்பை மறித்து நின்றனர். அதையடுத்து, அவர்களை அகற்றி ஜீப் புறப்பட்டவுடன் அதனை துரத்தி தெருவில் ஓடினர். இதனால், சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த கண்ணம்மா, மாலதி ஆகியோர் கூறுகையில், "எங்கள் பரம்பரை சொத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக போலீஸாரும் செயல்படுவதால் ஆளுநரை நாடி வந்தோம். ஏற்கெனவே சகோதரர்கள் ஐவர் வீடு கட்டிவிட்டு ஆறாவதாக வீடு கட்டும்போது பிரச்சினை ஏற்பட்டது. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x