

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய காவல் கூடுதல் ஆணையர் தினகரன் உட்பட 50 பேரை பாராட்டு சான்றிதழ் கொடுத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வரவேற்றார்.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்து அடுத்தடுத்து பணிக்குத் திரும்பி வருகின்றனர். அதன்படி, வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன், குணமடைந்து நேற்று பணிக்குத் திரும்பினார்.
மேலும் 49 போலீஸாரும் (2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவலர்கள்) நேற்று பணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்கள் அருண், பிரேம்ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர்கள் சுதாகர், கபில்குமார் சரத்கர், மகேஷ்வரி, விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.