Last Updated : 01 Jun, 2020 05:16 PM

 

Published : 01 Jun 2020 05:16 PM
Last Updated : 01 Jun 2020 05:16 PM

உயர் நீதிமன்ற மதுரை கிளை திறப்பு; 2 மாதங்களுக்குப் பின் நேரடி விசாரணை- வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி

மதுரை

கரோனா ஊரடங்கால் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று திறக்கப்பட்டு நேரடி விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியுடன் விசாரணையில் பங்கேற்றனர்.

கரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.

வீடியோ கான்பரன்ஸ் வசதியில் மட்டுமே விசாரணை நடைபெற்றது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சென்னையில் கரோனா பரவல் அதிகம் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வசதியும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காலையில் நேரடியாகவும், மதியத்துக்கு மேல் வீடியோ கான்பரன்ஸ் வசதியிலும் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2 மாதங்களுக்கு பிறகு இன்று நேரடி விசாரணை நடைபெற்றது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை நீதிமன்றத்தில் நேரடியாகவும், மதியத்துக்கு மேல் வீடியோ கான்பரன்சிலும் விசாரணை நடைபெற்றது.

வழக்கு தொடர்ந்த மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மனுதாரர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவி்ல்லை.

நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். வழக்கறிஞர்களுக்கான இடத்திலும், பார்வையாளர்களுக்கான இடத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

முன்னதாக நீதிமன்ற கட்டிட வாயிலில் நுழையும் போதும், நீதிமன்ற அறைக்குள் நுழையும் போதும் வழக்கறிஞர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணியாமல் வெள்ளை சட்டை, கருப்பு அல்லது வெள்ளை பேன்ட் அணிந்து வந்தனர்.

மனுக்களை நேரில் தாக்கல் செய்யும் நடைமுறையும் தொடங்கியது. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியுடன் விசாரணையில் பங்கேற்றனர். கடந்த 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட உயர் நீதிமன்ற கிளை வளாகம் வாகனங்களால் நிரம்பி காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x