3 மாதங்களுக்குப் பிறகு உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்: சுழற்சி முறையில் 120 படகுகளுக்கு மட்டும் அனுமதி

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றன. படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றன. படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 241 விசைப்படகுகள் உள்ளன. தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த விசைப்படகுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலமும் அமலுக்கு வந்ததால் தொடர்ந்து 3 மாதங்களாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தற்போது தடைக்காலம் முடிவடைந்து ஜூன் 1-ம் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 241 படகுகளில் 120 படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், மீதமுள்ள படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களும் சுழற்சி முறையில் செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு 120 விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கிளம்பி கடலுக்கு சென்றன. மீன்பிடித் துறைமுகத்துக்குள் மீன்வளத்துறை அனுமதி பெற்ற மீனவர்கள், வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அனுமதி பெற்று வந்த மீனவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஒரு படகில் 21 மீனவர்கள் சென்று வந்த நிலையில் தற்போது 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மீதமுள்ள படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in