Published : 01 Jun 2020 02:03 PM
Last Updated : 01 Jun 2020 02:03 PM

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் இல்லை; காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 5,569 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் இல்லை. ஓராண்டு சராசரி எடுத்துப் பிடித்துள்ளோம். ஆண்டு முழுதும் லீவு போட்டிருப்பார்கள். அவர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியுமா? ஆண்டு சராசரி கணக்கிட்டே சம்பளம் பிடித்துள்ளோம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 60 சதவீதப் பயணிகளுடன் பேருந்தை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புறநகரில் 50 இருக்கைகளில் 32 பயணிகளும், நகர்ப்புறத்தில் 42 இருக்கைகளில் 24 பயணிகளும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகளும், புறநகர் பகுதியில் 2,637 பேருந்துகளும், மலைப்பகுதியில் 167 பேருந்துகளும் என மொத்தம் 5,569 பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பணமில்லாப் பரிவர்த்தனை மூலம் பேடிஎம் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. 2 பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக பேடிஎம் அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து இல்லை. அங்கு பேருந்து நிலையத்தில் மார்க்கெட் உள்ளதாலும், மாவட்ட எல்லையில் சில பிரச்சினைகள் உள்ளதாகும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று கூட்டம் முடிந்தவுடன் நாளை அங்கு பேருந்து சேவை ஆரம்பிக்கும்.

வெப்ப பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே பயணிகள் ஏற்றப்படுவார்கள். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 8 போக்குவரத்துக் கழகங்களில் சென்னை போக்குவரத்துக் கழகம், மாநில விரைவுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தவிர மீதி 6 போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கவில்லை என நேற்று அறிவித்துள்ளனர். கட்டணம் எதுவும் ஏற்றவில்லை. அதே பழைய கட்டணத்துடன் இயக்கப்படும். பொதுத் தேர்வு நேரத்தில் எந்த ரூட் தேவையோ அந்த ரூட்டுக்கு பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தினமும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

இப்போதைக்கு மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். 60 நாட்களுக்கு மேல் பேருந்துகளை நிறுத்தியுள்ளோம். இப்போதைக்கு அரசு அறிவித்தபடி பேருந்துகள் இயக்கப்படும். தற்போது மண்டலங்களுக்குள் இ பாஸ் இல்லை. மண்டலங்களுக்கு வெளியே செல்ல கட்டாயம் இ பாஸ் வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் இல்லை. ஓராண்டு சராசரி எடுத்து பிடித்துள்ளோம். ஆண்டு முழுதும் லீவு போட்டிருப்பார்கள் அவர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியுமா? ஆண்டு சராசரி கணக்கிட்டே சம்பளம் பிடித்துள்ளோம். தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மக்களின் தேவை அறிந்து பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x