

புதுச்சேரி அரசுக்கு கரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசு அளித்த ரூ.3.8 கோடியில் 15 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ள அவலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மாநில பொது சுகாதார நிறுவனங்களுக்கு மத்திய பொது சுகாதார நிறுவனம் நிதி தந்துள்ளது. அதில் செலவிடப்பட்டுள்ள நிதி தொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அதில் கிடைத்த தகவல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியிடம் மனு தந்தார்.
மனு தொடர்பாக அவர் கூறியதாவது:
"கரோனா தடுப்பு நிதியாக மத்திய பொது சுகாதார நிறுவனம் ரூ.3.8 கோடி நிதியை புதுச்சேரிக்குத் தந்துள்ளது. இதில் கடந்த மே 21-ம் தேதி வரை மருத்துவப் பரிசோதனைக்கு ரூ.56.35 லட்சமும், போக்குவரத்துக்கு ரூ.8 ஆயிரமும் சுகாதார விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு ரூ.1.11 லட்சமும் என மொத்தம் ரூ.57.55 லட்சம் மட்டுமே செலவிட்டுள்ளனர். இது மொத்தமாக வந்த தொகையில் 15 சதவீதம்தான்.
கரோனா நோய் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதி இல்லை எனவும், பாதுகாப்பு சாதனங்கள் இல்லை எனவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மத்திய அரசு அளித்துள்ள நிதியை புதுச்சேரி சுகாதாரத்துறை முழுமையாகப் பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
மத்திய பொது சுகாதார நிறுவன நிதியைக் கொண்டு கூடுதலாக ரத்தப் பரிசோதனை சாதனங்கள், மருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம், நோயாளிகளுக்கு அடிப்படை வசதி செய்ய இந்த நிதியை முழுமையாகச் செலவிட நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்".
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.