Published : 31 May 2020 07:00 PM
Last Updated : 31 May 2020 07:00 PM

கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகளுக்கு செல்ல தொடரும் தடை: வாழ்வாதாரத்தை காக்க வழியின்றி தவிக்கும் மக்கள்

சுற்றுலாத்தலமான கொடைக்கானல் செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை தொடர்வதால் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள கொடைக்கானல் மக்கள் பலர் வருவாயின்றி சிரமப்படும் நிலை தொடர்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் களைகட்டும். ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் மாதமாக கோடை சீசன் மாதம் இருக்கும். கரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கிற்கு முன்னதாகவே கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.

இதனால் 70 நாட்களுக்கு மேலாக சுற்றுலாபயணிகள் வருகை இன்றி கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதனால் சுற்றுலாபயணிகளை நம்பி தொழில் செய்துவந்த பலர் தங்கள் வாழ்வாவதாரத்தை இழந்து குடும்பத்தைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதிநிறுவனங்களிடம் கடன் பெற்றநிலையில் தவணை செலுத்த வலியுறுத்துவதாக கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் நலிவடைந்து வரும் நிலையில் ஜூன் தொடக்கம் முதல் தளர்வுகளை அரசு அறிவித்தால் படிப்படியாக இயல்புவாழ்க்கைக்கு திரும்பலாம் என நம்பியிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை தொடர்வதாக அரசு அறிவித்தது, கொடைக்கானல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானல் சென்றுவர அனுமதிக்கவேண்டும். பின்னர் மதுரை மண்டலத்திற்குட்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை அனுமதிக்கலாம் இவ்வாறு அரசு உத்தரவிட்டால் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்ப ஏதுவாக இருக்கும் என்கின்றனர் கொடைக்கானல் மக்கள்.

கரோனா தொற்று பெரும்பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிவிட்ட நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு மட்டும் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.

இதுகுறித்து கொடைக்கானல் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தலைவர் ரமேஷ் கூறுகையில், சிறிய அளவிலான கடன் உதவிகளை செய்ய அரசு முன்வரவேண்டும். தனியார் நிதிநிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பம் நடத்தவே வருவாயின்றி சிரமப்படுகிறோம்.

எங்களைப்போல சுற்றுலாபயணிகளை நம்பி தொழில் செய்வோர் பலர் வருவாயின்றி குடும்பத்திற்கு உணவுப்பொருட்கள் வாங்கவே சிரமப்படுகின்றனர்.

ஊரடங்கு தொடக்கத்தில் சமூக ஆர்வலர்கள் செய்த உதவியை தொடர்ந்து எதிர்பார்ப்பது இயலாத காரியமாக உள்ளது. ஏனென்றால் உதவி செய்தவர்களும் சுற்றுலாவை நம்பியே தொழில் செய்துவருபவர்கள். அவர்களுக்கும் பாதிப்பு உள்ளது.

படிப்படியாக சுற்றுலாபயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதித்தால் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கமுடியும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x