தூத்துக்குடியில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்: பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி சந்தை மாற்றம்-சம்பளத்தில் பிடித்தம் செய்ததாக ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்: பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி சந்தை மாற்றம்-சம்பளத்தில் பிடித்தம் செய்ததாக ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்
Updated on
1 min read

50 சதவீத பேருந்துகள் நாளை (ஜூன் 1) முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் ஜூன் 1-ம் தேதி முதல் இயங்கும் என அரசு அறிவித்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 311 வழித்தடங்களில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து தயார் படுத்தப்பட்டன. மேலும், வெளியூர்களில் உள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகள் இன்று முதல் இயங்கவுள்ளதால் தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, புதிய பேருந்து நிலைய பகுதிக்கு மாற்றப்பட்டது.

மேலும், பேருந்து நிலையத்தை மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்து தெளித்து தயார்படுத்தினர்.

இதற்கிடையே ஊரங்கு காலத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்ததாக கூறி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in