Last Updated : 31 May, 2020 11:35 AM

 

Published : 31 May 2020 11:35 AM
Last Updated : 31 May 2020 11:35 AM

சிறைகளில் கரோனா தொற்று பரவுவதால் நீண்ட நாள் கைதிகளை பரோலில் விடவேண்டும்!- தமிழ்தேசியப் பேரியக்கம் அரசுக்கு கோரிக்கை

சென்னை

தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகள் பலருக்கும் கரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சிறைவாசிகளை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'புழல் சிறையில் 31 சிறையாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், புழல் சிறையிலிருந்து திருச்சி மற்றும் கடலூர் நடுவண் சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் வழியாக அங்கும் கரோனா பரவுவதாகவும் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

இந்திய அரசின் பாரபட்சம் காரணமாக சட்ட நெறிகளுக்கு எதிரான வகையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிக்குமார், ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களைத் தவிர நோய்வாய்ப்பட்டும் விடுதலை செய்யப்படாத நீண்டகால சிறைவாசிகள் எரா ஏறாளமானோர் தமிழக சிறைகளில் வாடுகிறார்கள்.

இந்நிலையில், சிறைகளில் கரோனா தொற்று பரவத் தொடங்கினால் மிகப்பெரிய மனித உயிராபத்தை ஏற்படுத்தி விடும். இந்த மெய்நிலையைக் கருத்தில் கொண்டுதான், உச்ச நீதிமன்றம் சிறையாளிகளுக்கு தாராளமான வகையில் விடுப்பு அளிப்பது, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிப்பது போன்றவற்றை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியது.

பரவி வரும் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களுக்கும், பிற நீண்டகால சிறைவாசிகளுக்கும் நீண்டநாள் விடுப்பு (பரோல்) வழங்கி வெளியில் விடுமாறும், விசாரணை சிறையாளிகளுக்கு தாராளமான முறையில் பிணை வழங்கி விடுதலை செய்திடுமாறும் தமிழ்தேசியப் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.’
இவ்வாறு வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x