Published : 31 May 2020 10:53 AM
Last Updated : 31 May 2020 10:53 AM

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்

தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேற்று தளர்வுகளுடன் கூடிய அன்லாக் 1 என்பதன் கீழ் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்டை நீட்டித்தது, மற்றப்பகுதிகளுக்கு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட வேண்டிய் விவரங்களையும் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசும் முழு ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன்.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

· வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

· நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

· தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

· வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்)

· பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

· மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

· மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

· திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

· அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

· மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்

· இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

· திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பொது பேருந்து போக்குவரத்து :

மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது

மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைபடுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.

மண்டலம் -1: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம்- 2: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் -3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் -4: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம்-5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்

மண்டலம்-6: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம்- 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம்- 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி


* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.

* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்திற்கு தடை தொடரும்

* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயங்க அனுமதி

* பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

* மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ - பாஸ் தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் இ-பாஸ் தேவையில்லை

* அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

* அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பஸ்கள் இயக்கப்படும்


இ-பாஸ் முறை :

· அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

· வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

2) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

2. சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு ஜூன் 1 முதல் அனுமதி

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கவிக்க வேண்டும்

* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள்
50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது

* டீக்கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

* மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தலாம்.
* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே மண்டலத்தற்குள் இ பாஸ் இன்றி பயன்படுத்தலாம்

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது

* சலூன்கள் மற்றும்அழகுநிலையங்களில் ஏசியை பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.


3. சென்னை போலீஸ் துறை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) 1ம் தேதி முதல் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி:


* தொழில் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 20 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்

* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள மட்டுமே கடைக்குள் இருக்கும் பொருட்டு , தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படாம்.

*மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது

*ஜூன் 8 முதல் டீ கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேருடன் இயங்கலாம்

* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகறது. சைக்கிள் ரிக்ஷாவும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான விதிமுறைகள்

* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடரும்

* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால், அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் கட்டட பணியாளர்கள், இந்நோய் தொற்றை தடுக்கும் வகையில், அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளிநபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

சிறப்பு மதிப்பூதியம்

சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றி வரும் சுமார் 33 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் சேவையை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கம் 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

ஆயிரம் ரூபாய் நிவாரணம்

சென்னையில், மாநகராட்சி பகுதியில், ஏழைகளின் வாழ்விடங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில உள்ளது. எனவே, ஒர நோய் பரவல் தடுப்பு பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக சென்னை குடிசை பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் மற்றும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைபடுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாளாவது தங்க வைத்து அவர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய் பரவல் தடுக்கப்படும். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் அவர்கள், முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது, தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் நிவாரணம் வழங்கப்படும்.

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். வீட்டிலும், அலுவலகத்திலும் கட்டாயம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x