Last Updated : 31 May, 2020 06:32 AM

 

Published : 31 May 2020 06:32 AM
Last Updated : 31 May 2020 06:32 AM

சாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை

சென்னை

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, 130 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில், வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளன. அதனால், கரோனாவைரஸைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அஸ்வின் விஜய் கூறியதாவது:

கரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சமடைகின்றனர். இந்த வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புதான் இதற்கு காரணம். பரிசோதனைகள் அதிகரிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நாம் பாதிப்பின் எண்ணிக்கையை பார்க்கக்கூடாது. இறப்பு விகிதத்தைத்தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். உயிரிழந்த 154பேரில் பலர் சர்க்கரை குறைபாடு,இதய நோய், சிறுநீரகம், நுரையீரல்பாதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம். எனவே, முதியோர்,ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

புதிதாக ஏற்படும் தொற்றுக்குஉடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொற்று கட்டுக்குள்வராது. டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா எப்படி நம்முடன்இருக்கிறதோ, அதேபோல்தான் கரோனாவும் இருக்கப் போகிறது.

ஆரம்பத்தில் கரோனா பாதிப்பு 10, 20 என வந்தபோது பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். தற்போது தினமும் பாதிப்பு 700, 800 என வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அப்போது இருந்த அச்சம் பொதுமக்களிடம் இப்போது இல்லை. இதற்கு, இறப்பு விகிதம்குறைவாக இறப்பதே முக்கிய காரணம். இன்னும் 3 மாதங்களில் கரோனா வைரஸ் குறித்த அச்சம்பொதுமக்களிடம் இருந்து முழுமையாக நீங்கி சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.

இந்தியாவில் கரோனா பாதிப்புஅதிகம் இல்லாததற்கு நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுபழக்க வழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. புகை பிடிப்போர்,மது அருந்துவோர், பாஸ்ட்ஃபுட்உணவுகளை சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாகஇருக்கும். அதனால், அந்த பழக்கத்தில் இருந்து வெளி வரவேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி, சீரகம், நெல்லிக்காய், கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ ஜூஸ் குடிக்கலாம். முக்கியமாக, வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அஸ்வின் விஜய் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x