Last Updated : 30 May, 2020 07:12 PM

 

Published : 30 May 2020 07:12 PM
Last Updated : 30 May 2020 07:12 PM

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கடல் பயணத்திற்காக 4-வது நவீன படகு வெள்ளோட்டம்: ஊரடங்கிற்குப் பின் சேவையைத் தொடங்க திட்டம்

கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளின் கடல் பயணத்திற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு 4-வது நவீன படகு இன்று வந்தது. இதன் வெள்ளோட்டம் முடிந்த நிலையில் ஊரடங்கிற்கு பின்பு அனுமதி கிடைத்ததும் சேவையை தொடங்கவுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு கடல் பயணமாக சுற்றுலா பயணிகள் செல்லும் படகு சேவை உள்ளது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகள் மூலம் கடலில் படகு போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறது.

கோடை காலம், மற்றும் பிற பண்டிகை சீஸன்களில் லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவதால் அந்நேரங்களில் ஏராளமானோர் படகு சவாரி மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம்.

இதனால் படகு தளத்தை விரிவுபடுத்தி கூடுதல் படகு சேவை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், மற்றும் சற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்காக கூடுதலாக இரு நவீன படகுகள் விடப்படும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கோவாவில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் ஏ.சி. வசதியுடன் இரு நவீன படகுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் பணி முடிந்து தாமிரபரணி என்ற படகு இன்று கன்னியாகுமரி படகு இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த படகு விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் சிலை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே 3 படகுகள் விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தாலும் அவை சாதாரண இருக்கை வசதிகளுடனே இருந்தது. தற்போது வந்துள்ள தாமிரபரணி படகு மட்டுமே ஏ.சி., மற்றும் நவீன இருக்கை வசதிகளுடன் கூடிய படகாகும்.

இந்த படகை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 5வது படகு பணி கோவாவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அந்த படகும் விரைவில் கன்னியாகுமரி வரவுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், கட்டுப்பாடுகள் நீங்கி முறையான அனுமதி கிடைத்த பின்னர் புதிய தாமிரபரணி படகின் கடல் போக்குவரத்து தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x