Published : 30 May 2020 06:46 AM
Last Updated : 30 May 2020 06:46 AM

சென்னை விமான நிலையம், வேலூரில் 104 டிகிரி வெயில்- பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: மதுரை கள்ளிக்குடியில் 12 செமீ மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை கள்ளிக்குடியில் 12 செமீ, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் இடையப்பட்டி ஆகிய இடங்களில் தலா 11 செமீ, மதுரை திருமங்கலம், பேரையூர், தல்லாகுளம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை விமான நிலையம், வேலூரில் 104 டிகிரி, திருச்சியில் 102, புதுச்சேரியில் 101, சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவாய்ப்புள்ளதால் மே 31 முதல்ஜூன் 5 வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x