Last Updated : 29 May, 2020 08:09 PM

 

Published : 29 May 2020 08:09 PM
Last Updated : 29 May 2020 08:09 PM

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 28 நாட்களில் 45 பேர் உயிரிழப்பு: மருத்துவத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28 நாட்களில் 45 பேர் உயிரிந்தது குறித்து மருத்துவத்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்துக்கு கடந்த மார்ச்சில் முதல்வர் பழனிச்சாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன.

அதனையடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு டீன் நியமிக்கப்பட்டு, அவரது நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 25 முதல் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை முன்னிட்டு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மே 1 முதல் 28-ம் தேதி வரையில் அவசரச் சிகிச்சைக்கு வந்தவர்களில் 28 ஆண்கள், 12 பெண்கள், 5 குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதில் ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தைச் சேர்ந்த செல்வகுமார்(36) என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 27-ம் தேதி இரவு கடும் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு முழுவதும் மருத்துவர் யாரும் முறையாக சிகிச்சை அளிக்காததால், நேற்று காலையில் ஸ்கேன் எடுக்கச் செல்லும்போது, அவர் மயங்கி விழுந்து இறந்தார். அவருக்கு குடல்வால்வு (அப்பெண்டிக்ஸ்) பிரச்சினையை உடனே கண்டறிந்து அறுவைச் சிகிச்சை செய்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும், உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மருத்துவர்கள் கரோனா பணியில் இருப்பதாகக் கூறி, அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே இம்மாதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, மே மாதத்தில் இறந்த 45 பேரில் தற்கொலை, விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பலர் உள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாலும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் குழு மூலம் விசாரணை நடத்தி அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x