

கரோனா ஊரடங்கு கால நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை மூலம் பெர்மிட் வழங்கிய அனைத்து ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கியது போல் போக்குவரத்துத் துறை மூலம் பொதுப்பணி வில்லை பெற்றுள்ள அனைத்து ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
வாகன உரிமம் புதுப்பித்தலுக்கு 2021 பிப்ரவரி வரை ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
ஆட்டோ, கார், வேன் அனுமதி உரிமத்தையும், சாலை வரியையும் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி ஆட்டோ சங்க செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இதேபோல் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.