Published : 29 May 2020 06:52 PM
Last Updated : 29 May 2020 06:52 PM

தளர்வு குறித்து முடிவெடுத்தால் தலைமைச் செயலரிடம் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், முழு அளவில் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், ஜுன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனால், தூர்வாருகின்ற பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்ட முடிவில் ஆற்றிய உரை:

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களுடைய மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக, தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது கோடைக் காலமாக இருக்கின்ற காரணத்தினாலே தங்களுடைய மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல குடிமராமத்து சிறப்பான திட்டம் என்று அரசால் அறிவிக்கப்பட்டு அது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தை வேகமாக, துரிதமாக முடிப்பதற்குண்டான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டும். அதேபோல, ரேஷன் பொருட்கள் தங்குதடையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு நேரடியாக பொருள் கிடைப்பதற்கு உண்டான வழிவகைகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் தங்கி பணிபுரிந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தால் அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழ்நாட்டிலே பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு விட்டன.

பணிபுரிய விரும்புகின்ற தொழிலாளர்களை அங்கேயே பணி செய்வதற்கு நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு செல்வதற்கு On-line-ல் பதிவு செய்திருப்பார்கள். இப்பொழுது, தொழிற்சாலைகள் துவங்கப்பட்ட காரணத்தினால் அவர்கள் தமிழகத்திலே தங்கி பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அங்கேயே பணிபுரிய நீங்கள் அனுமதிக்க வேண்டும். On-line-ல் பதிவு செய்திருந்தால் கூட அதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

100 நாள் வேலை திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், முழு அளவில் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், ஜுன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனால், தூர்வாருகின்ற பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்த ஆண்டு முன்கூட்டியே இந்தப் பணி துவக்கப்பட்டு விட்டது. அதனால், குறுவை சாகுபடி செய்கின்ற அந்தப் பகுதியில் இருக்கின்ற கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.

அதில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்கின்றபொழுது எவ்விதத் தடையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். பிற மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வருகின்ற தொழிலாளர்களை மாவட்ட எல்லையிலேயே கண்காணித்து, அந்தந்த மாவட்டத்திற்கு அவர்களை அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தி positive caseஆக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

negative-ஆக இருந்தால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். அதற்கும் வசதி இல்லாதவர்கள் இருந்தால், அவர்களுக்கென்று தனியாக, பிரத்யேகமாக நீங்கள் மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். வெளி மாநிலத்திலிருந்து வருகின்ற தொழிலாளர்களை நம்முடைய மாநில எல்லையிலேயே காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து, அவர்களை அந்தந்த மாவட்டத்திற்கு சரியான முறையில் அனுப்பி வைக்க வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தினமும் இரண்டு முறை தூய்மைப் பணிகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வெளி மாநில, வெளி மாவட்டத் தொழிலாளர்களுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

திறக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறுகின்றதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் வெளியிலே செல்கின்றபொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொருட்கள் வாங்குகின்றபொழுது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பும்பொழுது கண்டிப்பாக, அவசியமாக கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, முக்கிய கிராமங்களிலே ஒலிபெருக்கியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து இந்த நோய்ப் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சிறப்பான முறையிலே அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்கள் மாவட்டங்களில் பணியாற்றி இருக்கின்றீர்கள். அரசு குறிப்பிட்ட ஆலோசனையை ஏற்று, அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றீர்கள். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது.


ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றவர்கள் மூலமாகத் தான் நோய்ப் பரவுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றபொழுது, அவர்களிடம்தான் நோய்த் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களோ, வேறு எவரேனும் வந்தால், அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.


சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பதற்கு நீங்கள் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


இன்றைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளர்வை ஏற்படுத்திவிடக்கூடாது. நீங்கள் எந்தவொரு தளர்வு ஏற்படுத்த வேண்டுமென்றாலும் நம்முடைய தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு அவருடைய அனுமதி பெற்றுத்தான் நீங்கள் அறிவிக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


அதேபோல, தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து எவரும் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அந்த இடத்திற்கு வேறு எவரும் செல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல அங்குள்ள பொதுக் கழிப்பிடங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.


அதேபோல, தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வருகின்ற பணியாளர்களை பரிசோதனை செய்துதான் தொழிற்சாலைக்கு அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளிலுள்ள கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படவேண்டும்.


தொழிற்சாலைகள் காலையிலும், மாலையிலும் இரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி மிகச் சிறப்பாக செயல்படுத்திய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அவருக்குத் துணை நின்ற அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் மனமார, உளமாற நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.


அதேபோல, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் அரசின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x