Last Updated : 29 May, 2020 05:15 PM

 

Published : 29 May 2020 05:15 PM
Last Updated : 29 May 2020 05:15 PM

பலத்த மழையால் கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தம்: திருப்புவனத்தில் 108.4 மி.மீ., மழைப்பதிவு

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கீழடியில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. திருப்புவனத்தில் அதிகபட்சம் 108.4 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. கீழடியில் தார்பாய் மூடியும் குழிகள் நிரம்பின. இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

‘மழைநீர் வற்றி, மண் காய்ந்த பிறகே மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கும்,’ என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 108.4 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கையில் 43 மி.மீ., மானாமதுரையில் 19, இளையான்குடியில் 31, தேவகோட்டையில் 16.6, காரைக்குடியில் 18.4, திருப்பத்தூரில் 18, காளையார்கோவிலில் 78.8, சிங்கம்புணரியில் 5.2 மி.மீ., மொத்தம் 254.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x