Last Updated : 29 May, 2020 04:49 PM

 

Published : 29 May 2020 04:49 PM
Last Updated : 29 May 2020 04:49 PM

ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து இதுவரை 105 பேர் மீண்டுள்ளனர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. இது 53 சதவீதமாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 198 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் மும்பையில் இருந்து ரயில் மூலம் வந்தவர்கள் என 250 பேருக்கான கரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த முடிவுகள் வந்தால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவமனை டீன் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பழக்கூடைகளை கொடுத்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்றில் இருந்து 86 பேர் விடுபட்டுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து 53 சதவீதம் பேர் குணமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x