Published : 29 May 2020 10:36 AM
Last Updated : 29 May 2020 10:36 AM

ஊரகத் தொழில்களை மேம்படுத்த ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக, ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 29) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுக்கவும் உலக வங்கியின் கடனுதவியுடன் 918 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 120 வட்டாரங்களைக் சேர்ந்த 3,994 கிராம ஊராட்சிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு, இத்திட்டத்திற்காக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்திட்டம் பல்வேறு சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதன் மூலம் ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் நியமனம் செய்ய 31.10.2019 அன்று முதல்வரால் 525 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு திட்டம் குறித்த உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

28.5.2020 அன்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையில் இருந்து கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் புதிதாகத் தொழில்களைத் தொடங்கவும் 300 கோடி ரூபாய் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், பல்வேறு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே தொழில் செய்துகொண்டிருப்பின் அதனை மேம்படுத்திடவும், தமிழ்நாடு ஊரகப் புத்தாகத் திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம்,

31 ஆயிரத்து 952 நபர்களுக்கு மொத்தம் 159 கோடியே 76 லட்சம் ரூபாய் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

1,598 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 31 ஆயிரத்து 960 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு 20 நபர்கள் என, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 23 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 240 தொழில் குழுக்களுக்கு 1,200 நபர்கள் என, தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும்.

புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பி வந்த 5,010 இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடியே 10 லட்சம் ரூபாய் நீண்டகால கடனாக வழங்கப்படும்.

ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு 500 நபர்கள் வீதம் 37 ஆயிரத்து 500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா 10 லட்சம் ரூபாய் என 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மூலதன மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டுக்காக 31 ஆயிரத்து 952 நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மொத்தம் 49 கோடியே 92 லட்சம் ரூபாய் நீண்ட காலக் கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், கரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரித்தல், கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் திரவ சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு, ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை, சிறு மளிகைக் கடைகள் வைத்தல், அரவை மாவுத் தொழில், பல்வேறு உலோகப் பொருட்களை தயாரித்தல், செயற்கை ஆபரணத் தொழில், அழகுக்கலை, மரச்சிற்பங்கள் / மரவேலைகள், மின் பழுது நீக்கம், குழாய் பழுது நீக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்கம், கணினி சார்ந்த தொழில்கள், கைபேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்காக இச்சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.

இதன்மூலம் ஊரக பொருளாதார வளர்ச்சியும், ஊரக தொழில்களில் எழுச்சியும், மக்கள் வருமானத்தில் முன்னேற்றமும் ஏற்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x