மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு பணம், பொருட்கள் வழங்கும் ‘நண்பர்கள் குழு’- ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ‘நண்பர்கள் குழு’ சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு உணவு வழங்கப்படுகிறது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ‘நண்பர்கள் குழு’ சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு உணவு வழங்கப்படுகிறது.
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு மருந்துகள் வாங்க வங்கி கணக்கில் பணமும், நிவாரண பொருட்களும் வழங்கும் ‘நண்பர்கள் குழு’வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பொருட்களை விற்பவர்கள், வீட்டுவேலை செய்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் எந்தவித வருமானம் இன்றி முடங்கியுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் உதவி, நிவாரணம் அளித்து வந்தாலும், இவர்களுக்கான தேவை தீர்க்கப்படவில்லை. இதனால், பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தஉதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.வி.சுரேந்தர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி,ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏ.வி.சுரேந்தர், ஜெ.பிரபாகரன், ஓ.மனோகரன் ஆகியோர் கூறியதாவது:

ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாங்கள் 20 நண்பர்கள்சேர்ந்து, பொதுநலன் கருதி உதவிசெய்ய வேண்டுமென முடிவு எடுத்தோம். எங்களிடம் இருக்கும் நிதியைத் திரட்டி, வில்லிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உதவி செய்து வருகிறோம். மற்றவர்களைக் காட்டிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்குதான்அதிக உதவி தேவைப்படுகிறது.

எனவே, உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் சிறிய தொகை செலுத்தி வருகிறோம். குறிப்பாக, மருந்து வாங்கபணம் இல்லாமல் கஷ்டப்படுவோருக்கு கட்டாயமாக உதவுகிறோம். வீட்டு வேலை செய்வோர், கூலித் தொழிலாளிகள் என 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக சென்று மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளோம்.

இதேபோல், பணம் இல்லாத முதியோர், சிறுவர் இல்லங்களுக்குமதியம், இரவு உணவு வழங்கி வருகிறோம். இதுவரை நாங்கள் மேற்கொண்ட 97-க்கும் மேற்பட்ட பணிகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு முடியும் வரைதொடர்ந்து உதவி செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in