

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்ததாக கடந்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன்கோரி சபரிராஜன் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மே 28) விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கோரி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், "கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதால், இப்போது ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சிகளை கலைக்கக்கூடும்" என வாதிட்டார்.
இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெ.ராதிகா உத்தரவிட்டார்.