Last Updated : 28 May, 2020 03:52 PM

 

Published : 28 May 2020 03:52 PM
Last Updated : 28 May 2020 03:52 PM

புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் டீசலுக்கு வரி உயர்வு: நாளை முதல் அமல்; 3 மாதங்களுக்கு நடைமுறை

கரோனா தடுப்புப் பணிகளுக்காக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு ஒரு சதவீதம் வரி ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாளை முதல் கடுமையாக உயர்த்தப்படுகிறது. இது மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று நிதித்துறை செயலர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

அதனால் சுகாதாரத் துறைக்காக எனக் குறிப்பிட்டு புதுச்சேரியில் கரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது.

இச்சூழலில் மீண்டும் பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை (மே 29) முதல் உயர்த்துகிறது.

புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 28 சதவீதமாகிறது. அதன்படி, தற்போது 5.85 சதவீதம் அதிகரிக்கிறது. டீசல் 21.8 சதவீதமாகிறது. அதன்படி 3.65 சதவீத வரி உயர்கிறது.

மாஹேயில் பெட்ரோல் வரி 23.9 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 1.75 ஆகும். டீசல் மீதான வரி உயர்வில்லை.

ஏனாமில் பெட்ரோல் மீதான வரி 25.7 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 3.55 ஆகும். டீசல் வரி 20 சதவீதமாகிறது. அதன் உயர்வு 1.85% ஆகும்.

இவ்வரி உயர்வு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் பயன்பாடு சரிய வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுச்சேரியில் குறைவாக இருக்கும். தற்போது அதிக அளவு வரி உயர்வால் தமிழகத்துக்கு இணையான விலை இருக்க வாய்ப்பு உள்ளது. விலை விவரம் நாளை காலையே தெரியவரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஆர்வலர்கள் வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஏற்கெனவே கரோனா வரியாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு யாரும் வாங்க வராமல் காலியாக மதுக்கடைகள் உள்ளன. அரசுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் போய் விட்டது. தற்போது பெட்ரோல், டீசலிலும் கடுமையாக வரியை அரசு உயர்த்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடும் சரிய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x