Last Updated : 28 May, 2020 03:38 PM

 

Published : 28 May 2020 03:38 PM
Last Updated : 28 May 2020 03:38 PM

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நீட் மற்றும் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்களும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு விருதுநகரில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ஏழை, எளிய மாணவர்களும் தேசிய அளவில் மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சிபெற பள்ளிக் கல்வித்துறை அனைத்து விதமான பயிற்சிகளையும் அளித்து வருகிறது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.

விரைவில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசின் வழிகாட்டுதல்களோடு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் வாட்ஸ்-ஆப் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x