தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ள தகவல்:

“வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மற்றும இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை, கரூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 7 சென்டி மீட்டர் மழையும், ஊத்துக்குளியில் 6 சென்டி மீட்டர் மழையும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

லட்சத்தீவு மற்றும் மாலத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரு தினங்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in