

மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பை தாராவியில் இருந்து நாசரேத்துக்கு இறந்தவர் உடலுடன் காரில் சென்ற 5 பேரை கோவில்பட்டி சோதனைச்சாவடியில் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மும்பை தாராவியில் இருந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக 59 வயதுடைய ஆண் உடலுடன் ஒரு ஆம்புலன்ஸிலும், அவரது மகன் உட்பட 5 பேர் ஒரு காரில் உரிய அனுமதியுடன் நாசரேத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கார் மற்றும் ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் எல்லையான கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடிக்கு வந்த போது, காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் இறந்த தங்களது தந்தையின் உடலை நாசரேத்துக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கை நடத்த செல்வதாகக் கூறினர். இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் பொன்னம்மாள், காவல் துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, சுகாதாரத் துறையினர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை பெற்றனர்.
இதையடுத்து கோவில்பட்டி மயானத்தில் உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
பின்னர் காரில் வந்த இறந்தவரின் மனைவி உள்ளிட்ட 2 பெண்கள், 2 மகன்கள் உள்ளிட்ட 3 ஆண்கள் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை எடுத்து அனுப்பப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் மும்பைக்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.
பைக்கில் வந்த இருவர் தடுத்து நிறுத்தம்:
இதுபோல, கேரளாவில் இருந்து கயத்தாறு வட்டம் சவலாப்பேரி மற்றும் சிவஞானபுரத்துக்கு மோட்டார் சைக்களில் வந்த 60 வயதுடைய ஆண் மற்றும் 51 வயது ஆண் ஆகிய இருவரும் கயத்தாறு சிவஞானபுரம் விலக்கில் தடுத்து நிறுத்தப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.