Published : 28 May 2020 11:58 AM
Last Updated : 28 May 2020 11:58 AM

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக வழக்குப்பதிவு: செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன்  

மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவான வழக்கில் அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரொனோ ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைத் தொடங்கி நிவாரணப்பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதுதவிர பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு திமுகவினர் அளித்து வந்தனர்.

அதன்படி கரூர் திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தபோது, ஆலோசனைக் கூட்டங்களுக்கு தொகுதி எம்எல்ஏ என்கிற முறையில் என்னை ஏன் அழைப்பதில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் தரப்பில் புகார் எழுந்தது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது, “தான் எந்த ஒரு மிரட்டலும் விடுக்கவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதன் அடிப்படையில், நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டுப் புனையப்பட்ட வழக்கு” என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வந்ததாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி நிர்மல் குமார் பிறப்பித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தவிட்டார். அதன்படி, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நடந்துகொண்டதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் செந்தில் பாலாஜி உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும், 2 வாரங்களுக்கு கரூர் மாவட்ட சிபிசிஐடி அலுவலத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x