Last Updated : 28 May, 2020 11:05 AM

 

Published : 28 May 2020 11:05 AM
Last Updated : 28 May 2020 11:05 AM

கரோனா முன்களப்பணியாளர்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில் களத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்களுக்கு கவச உடை, முகக் கவசம், கையுறை, ரப்பர் காலனி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாகத்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்தலுக்கு இடவசதி, உணவு வழங்குவது, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இதுவரை ரூ.850.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துறை முன்களப்பணியாளர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு தலா 280696 தனி பாதுகாப்பு உபகரணங்கள், கையுறைகள், 217240 என்- 95 முகக்கவசங்கள், வழங்கப்பட்டுள்ளன.

மேலும் முன்களப்பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஜிங் மாத்திரை, மல்டி வைட்டமின் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. முன்களப்பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆயிரம் கே செல்வக்குமார் வாதிட்டார்.

மதுரை, திருச்சி, தர்மபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து இந்த வழக்கில் மதுரை மாநகராட்சியை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x