Published : 28 May 2020 06:54 AM
Last Updated : 28 May 2020 06:54 AM

கேரளத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் தமிழகத்துக்கு மழை கிடைக்கும்

கேரள கடலோரப் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், அதன் மூலம் தமிழகத்துக்கு மழை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் நா.புவியரசன் நேற்று செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் (கேரள கரையை ஒட்டிய அரபிக் கடல் பகுதி) நாளை (மே 29) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் வங்கக் கடலில் இருந்து தமிழகம் வழியாக ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று ஈர்க்கப்படும். இதன் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி வரை இருக்கும். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 106 டிகிரி, வேலூர், க.பரமத்தி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, சேலம், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, மதுரையில் 101 டிகிரி, சென்னை விமான நிலையம், தருமபுரி, காரைக்கால், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங் களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்றார்.

அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு

கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தொடக்கத்தில் வெப்பநிலை குறைவாக இருந்த நிலையில், ‘உம்பன்’ புயலுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 ஃபாரன்ஹீட் பதிவானது. இந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x