Published : 27 May 2020 09:19 PM
Last Updated : 27 May 2020 09:19 PM
சரக்கு வாகனங்களுக்கு செப்டம்பர் வரை, மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு, மே 14-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விலக்களிக்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தேன்.
வரி செலுத்துவதற்கு கால நீட்டிப்பு கோரவில்லை. கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரி விலக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஜூன் 7-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT