Published : 27 May 2020 07:16 PM
Last Updated : 27 May 2020 07:16 PM

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா; சென்னையில் 558 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கும் தமிழகம்

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 558 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 11,645 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.

817 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 65.41 சதவீதத் தொற்று சென்னையில் (558) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 18,545 -ல் சென்னையில் மட்டும் 12,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 65.64 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 133 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .71% என்கிற அளவில் உள்ளது. 9,909 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 53.32 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 18 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்து 20 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

சென்னையும் 12 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. இன்று மட்டும் 139 பேர் தமிழகத்துக்கு வந்தவர்களில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் சராசரி 50க்கு மேல் வருகிறது.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 133 பேரில் சென்னையில் மட்டுமே 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 36 வார்டுகளைக் குறிவைத்து ஆய்வுகள் நடத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 54,758 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 18,545 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 14,821 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 14,465 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 20 மாவட்டங்களில் 259 பேருக்குத் தொற்று உள்ளது. 16 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.

* தற்போது 42 அரசு ஆய்வகங்கள், 28 தனியார் ஆய்வகங்கள் என 70 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக சிகிச்சையில் உள்ளவர்கள் 8,500 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,42,970.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 4,23,081.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,231.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் சதவீதம் 7.27 சதவீதம் .

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 18,545.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 11,725 (63.22 %) / பெண்கள் 6,815 (36.74%)/ மூன்றாம் பாலினத்தவர் 5 பேர்( .02 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 817.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 508 பேர். பெண்கள் 309 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 567 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 9,909 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 558 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 11,645 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 12,000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம். இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது. மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் 65.77 சதவீதத்தினர் சென்னையிலும், 34.23 சதவீதத்தினர் பிற மாவட்டங்களிலும் உள்ளனர்.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 888, திருவள்ளூர் 825, கடலூர் 439, அரியலூர் 362, விழுப்புரம் 332, காஞ்சிபுரம் 330, திருநெல்வேலி 301, திருவண்ணாமலை 263, மதுரை 241, தூத்துக்குடி 194, கள்ளக்குறிச்சி 227, கோவை 146, பெரம்பலூர் 139, திண்டுக்கல் 134, திருப்பூர் 114, தேனி முதன்முறையாக 108 என்கிற அளவை எட்டியுள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

21 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 139 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 16 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,122 பேர். இதில் ஆண் குழந்தைகள் 594 பேர். பெண் குழந்தைகள் 528 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 15,796 பேர். இதில் ஆண்கள் 10,121 பேர். பெண்கள் 5,670 பேர். மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1,627 பேர். இதில் ஆண்கள் 1,010 பேர். பெண்கள் 617 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x