Last Updated : 27 May, 2020 04:00 PM

 

Published : 27 May 2020 04:00 PM
Last Updated : 27 May 2020 04:00 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (மே 27) செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் நேற்று வரை கரோனா தொற்றால் 46 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 33 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் ரெட்டியார்பாளையம், தருமாபுரி, முத்தியால்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் புதுச்சேரியில் கரோனா தொற்றுடைய நபரின் வீட்டுக்கு வந்த மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரி பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். தமிழகப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

எனவே புதுச்சேரியில் தற்போது வரை 51 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கரோனா தொற்று அதகரித்து வருவதால் இதைத் தடுப்பது தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.

27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து 4,090 பேர் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக இ-பாஸ் வாங்கியுள்ளனர். எந்த முகவரி கொடுத்து வந்துள்ளனரோ, அந்த முகவரியில் அவர்கள் உள்ளனரா? என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யக் கூறியுள்ளேன். அவ்வாறு இல்லாமல் போலியாக இ-பாஸ் பெற்று வந்திருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

தற்போது தினமும் 2, 3 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதால் எதிர்காலத்தை நினைத்து பயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இன்னொரு 700 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனை தேவைப்படும். ஊரடங்கில் கூடுதல் தளர்வு ஏற்படுத்தினால் வருவாய் மற்றும் காவல்துறைக்குப் பொறுப்பு நீங்கிவிடும். ஆனால் சுகாதாரத்துறைக்கு பொறுப்பு அதிகரிக்கும்" என்றார்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "புதுச்சேரியில் இருந்து நாளை (மே 28) 1,500 பேர் ரயில் மூலம் பிஹார் செல்ல உள்ளனர். பரிசோதனை செய்த பின்னர் அவர்களை அனுப்ப உள்ளோம். புதுச்சேரியில் நேற்று வரை 34 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.

இவர்களில் 18 சதவீதம் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், 5 சதவீதம் கோயம்பேட்டைச் சேர்ந்தவர்கள், 15 சதவீதம் எம்.ஆர்.எஃப். தொழிலாளிகள், 13 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 18 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 5 சதவீதம் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள், 26 சதவீதம் பிற காரணங்களால் தொற்றுக்கு ஆளானவர்கள்.

பிற காரணங்களால் தொற்றுக்கு ஆளாகுவதுதான் பீதியாக உள்ளது. இதில் கரோனா நோயாளியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இடம் பெற்றுள்ளனர். நோயாளியிடம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதது, கிருமிநாசினி பயன்படுத்தாது ஆகியவைதான் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.

34 நோயாளிகளில் ஆண்கள் 74 சதவீதமும், பெண்கள் 26 சதவீதமும் உள்ளனர். 16 முதல் 60 வயதிற்குட்பட்ட நோயாளிகள் 90 சதவீதம் பேர் ஆவார்கள். 5, 7 மற்றும் 9 வயதுகளில் 3 சிறுவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிராமப்புறத்தைவிட, நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x