Last Updated : 27 May, 2020 03:57 PM

 

Published : 27 May 2020 03:57 PM
Last Updated : 27 May 2020 03:57 PM

கல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடியோரின் உதவித்தொகையை ரத்து செய்யும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்; தவிக்கும் மாணவ, மாணவிகள்

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

கல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப்பட்டபோது நிலம் கொடுத்தோர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. கடந்த கல்வியாண்டுக்கான அறிவிப்பிலும் இட ஒதுக்கீடு இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 83 சதவீதம் சராசரியாக உயர்ந்துள்ளதை எதிர்த்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், போராட்டங்களில் பங்கேற்றோருக்கு கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய பல்கலைக்கழகம் முடிவு எடுத்து சுற்றறிக்கையை துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலர் விண்ணரசனிடம் கேட்டதற்கு, "பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தருவதற்கான விதிகளில் நடப்பு க் கல்வி ஆண்டில் 70% சதவீத வருகைப்பதிவு கட்டாயம் எனவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டடங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது எனவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கல்விக் கட்டண உயர்வு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதான் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறமை, குடும்பப் பின்னணி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் என அனைவருக்குமான உயர்கல்வி வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதற்கு மாறான இந்த சுற்றறிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x