Published : 27 May 2020 08:05 AM
Last Updated : 27 May 2020 08:05 AM

ஊரடங்கால் முடங்கிய தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீடு மனுக்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மதுரை

2005-ல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரவும், பொதுமக்கள் அரசு ஆவணங்களை நேரடியாகப் பார்வையிடவும் இந்த சட்டம் உதவுகிறது.

சாமானியனும் அரசை கேள்வி யெழுப்ப உதவும் அற்புதமான சட்டம் இது.

கரோனா ஊரடங்கால் 2 மாதமாக இந்தச் சட்டம் முடங்கி உள்ளது. அதனால், ஊரடங்கு நாட்களில் முடங்கிய தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீடு மனுக்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்தை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனால், தகவல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வராததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கம் நிறைவடையாமல் போய் விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கோரி மனு அளித்தவர்களுக்கு, அரசுத் துறை பொது தகவல் அலுவலர், ஒரு மாதத்துக்குள் தகவல் அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது ஊரடங்கால் தகவல் கேட்டு மனு செய்தவர்களுக்கு அந்தந்த துறை அலுவலர்களால் தகவல் அளிக்க முடியவில்லை.

இதனால் அந்த மனு செல்லாததாகிவிடும் நிலை உள்ளது. மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், ஜூனில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பொது முடக்கத்தால் பொதுமக்கள் இச்சட்டத்தை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச்சட்ட பயன்பாட்டை தமிழகத்தில் ஆன்லைன் வசதியுடன் டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றவேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

அதை நிறைவேற்ற இந்த ஊரடங்கு காலமே சரியான தருணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x