

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவருக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதா வின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மேலும், ஜெய லலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு களாக தங்களை அறிவிக்கக் கோரி தீபாவும் தீபக்கும் தனியாக மனுக் களை தாக்கல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.40 கோடி வருமான வரி பாக்கிக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந் தது. அனைத்து தரப்பு வாதங் களும் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கிலும் அதேபோல தங்களை ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக்கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த இடையீட்டு வழக்கிலும் நீதிபதிகள் இன்று காலை விரி வாக தீர்ப்பளிக்க உள்ளனர்.
அவசரச் சட்டம்
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தை கையகப்படுத்துவதற் காக அவசரச் சட்டம் பிறப் பித்துள்ளது. இந்த நிலையில், அவரது சொத்துகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.