Published : 26 May 2020 07:35 PM
Last Updated : 26 May 2020 07:35 PM

மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?- தமிழக அரசு விளக்கம் 

நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 5-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் உட்பட 19 மருத்துவ நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு ஊரடங்கு முடியும்போதும் ஆய்வறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக அரசு கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நான்காவது முறையாக காணொலிக் காட்சி மூலமாக கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு (A way forward), மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

· மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதிய உத்திகள் (Testing Strategies)

· மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள் / நெறிமுறைகள் (Treatment Protocols)

· இறப்புகளைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் (Flattening the death curve)

· நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களைக் (Vulnerable group) கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்.

· தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் (Preparedness in Hospitals).

மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டில் குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை (Prevention and Containment Activities) மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் ஆகியோரும், ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவக் கழகத் தலைவர் சி.என். ராஜா, வேலூரிலிருந்து கிறித்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் பீட்டர் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்டனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) விஞ்ஞானியும், சென்னை, தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான ப்ரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டலக் குழுத் தலைவர் கே.என்.அருண் குமார், தொற்றுநோய் தடுப்பு நிபுணர் பி.குகானந்தம், அப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் வி.ராமசுப்பிரமணியம், சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ரகுநந்தன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x