Published : 26 May 2020 01:38 PM
Last Updated : 26 May 2020 01:38 PM

ஊரடங்கிலும் ஓயாது மரம் நடும் பணி: பெருந்தொற்றிலும் இயற்கையைப் போற்றும் இளைஞர்கள்

‘வாழவைக்கும் கடவுள்- மரம்’ என்ற வாசகம் அந்த ஆட்டோவின் முகப்பில் பளிச்சிடுகிறது. ஆட்டோ நிறைய மரக்கன்றுகளை ஏற்றிக்கொண்டு சந்தோஷையும் அழைத்துக் கொண்டு பறக்கிறார் ஓட்டுநர் முருகன். இந்த பொதுமுடக்க காலத்திலும் ஒவ்வொரு பகுதியாகப் போய் மரங்களை நடுகிறார்கள் இவர்கள்.

’பிரசவத்துக்கு இலவசம்’ என எழுதியிருக்கும் ஆட்டோக்களைப் பார்த்திருக்கிறோம். முருகனிடம் பிரசவத்துக்கு மட்டுமல்ல... மரம், செடி, கொடிகள் வாங்கப் போனாலும், சமூகப் பார்வையோடு அவற்றைப் பொது இடங்களில் நடப்போனாலும், ரத்த தானம் செய்யச் சென்றாலும் இலவசமாகவே பயணிக்கலாம். இதுகுறித்து முருகனிடம் பேசினால், “சந்தோஷ் மூலம்தான் இயற்கையின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. நம்மைச் சுமக்கும் பூமித் தாய்க்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு” இது என்கிறார்.

கொஞ்சம் விரிவாகவே இது தொடர்பாக சந்தோஷ் பேசினார். “சின்ன வயதில் இருந்தே மரம், செடி நடுவதில் ஆர்வம் அதிகம். கொஞ்சம் வளர்ந்ததும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், புகாகோ புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அது எனக்கு இயற்கை குறித்த புரிதல்களை இன்னும் விசாலமாக்கியது. என்னோட வீடு இருக்கும் டி.வி.டி காலனி பகுதியில் குறுக்குத் தெருக்களில் முதல்கட்டமா மரங்கள் நட்டு, வேலி அமைச்சேன். ஆனா, நகர்ப்புற வாசிகளுக்கு அதுகுறித்த அக்கறையும், புரிதலும் இல்லை. மரங்கள் நட்டதுமே அதோட வேர்களால் வீட்டுக்கு பாதிப்பு வரும்னு பயந்துட்டாங்க.

மரம் நடக்கூட நாங்க அவ்வளவு கஷ்டப்படலை. கடைசியா ஒரு வல்லுநரைக் கூட்டிட்டு வந்து, மரம் நடுவதால் எவ்வளவு நன்மை இருக்கு, இந்தப் பகுதியில் எல்லாம் பாதிப்பு வராதுன்னு விளக்கிச் சொல்ல வேண்டி இருந்துச்சு. நகர்ப்புறத்தில் படித்தவர்கள் நிறைந்த பகுதியிலேயே இயற்கையின் மீதான புரிதல் இப்படித்தான் இருக்கு.

எங்க குமரி மாவட்டத்தில் இரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்த ஒக்கி புயலிலும் ஏகப்பட்ட மரங்கள் விழுந்துடுச்சு. அதுக்குப் பதிலாகவும், புதிய மரங்கள் நட வேண்டிய தேவை இருக்குன்னு புரிஞ்சுகிட்டோம். ஆரம்பத்தில், ‘நேதாஜி இளைஞர் மன்றம்’னு வைச்சுருந்தேன். ஆனா, ஒரு கட்டத்தில் படிப்பு முடிஞ்சு நண்பர்கள் பலரும் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாங்க. இப்போ நானும், ஆட்டோ முருகன் அண்ணனுமா இந்தப் பணியில் இருக்கோம்.

இதுபோக, உள்ளூர் நண்பர்களையும், பள்ளியில் படிக்கும் சேவை ஆர்வமுள்ள மாணவர்களையும் சேர்த்துக்கிட்டு வாரம் ஒரு இடத்தில் தூய்மைப் பணியும் செய்யுறோம். இந்த கரோனா பொதுமுடக்கக் காலத்தில் எல்லாருடைய கவனமும் மனிதர்களை நோக்கியே இருந்தது. ஏழைகளுக்கு அரிசி, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வழங்குவதுன்னு பலரும் உதவுனாங்க. ஆனா, இயற்கையை யாரும் கண்டுக்கல.

கரோனா அச்சத்திலும், பொதுமுடக்க சேவையிலும் இயற்கையை மறக்கலாமா? மனிதர்களுக்குச் சேவை செய்றது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இடைவெளி இல்லாமல் இயற்கைக்கு வேலை செய்யறதும் முக்கியம். அதனால்தான் இந்த பொதுமுடக்க நேரத்திலும் மரம் நடுவதை நிறுத்தல. இப்ப மட்டுமே நூற்றுக்கணக்கான மரங்களை நட்டுருக்கோம். இதுபோக ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் வழிகாட்டுறோம்” என்றார் சந்தோஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x