Last Updated : 26 May, 2020 12:39 PM

 

Published : 26 May 2020 12:39 PM
Last Updated : 26 May 2020 12:39 PM

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்குக: மத்திய - மாநில அரசுகளுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

கடந்த ஆண்டு வாங்கிய விவசாயக் கடன்களை உடனடியாக வட்டியுடன் கட்ட வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் விவசாயிகளிடம் கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அந்தக் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு புதிய கடன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தே இந்திய நாடு பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. இதனால் பெற்ற கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல், நெருக்கடி தாங்காமல் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் உட்பட இந்தியா முழுவதும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் விவசாயிகளும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் 80 சதவீத விவசாயிகள் கடன் பெறும் தகுதியை இழந்துள்ளனர். எனவே, அவர்களது வேளாண் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் விவசாய உற்பத்தியைப் பெருக்க முடியாது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இரண்டு முறை கடன் தவணை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் , வட்டி சலுகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பு அரசாணை இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறும் வங்கிகள், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என விவசாயிகளை நெருக்குகின்றன.

கடன் பெற்ற தேதியில் இருந்து இன்று வரை 9 முதல் 13 சதவீதம் வரை வட்டி, அபராத வட்டி செலுத்த வேண்டுமெனவும் சொல்லி வங்கிகள் கெடுபிடி வசூலிலும் ஈடுபட்டுள்ளன. மேலும், விவசாயக் கடன் பெற்றவர்களின் சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வங்கிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும். மாறாக, வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளும் மத்திய அரசின் 2-வது கட்ட அறிவிப்பினைப் பின்பற்ற மறுப்பதோடு வட்டியில்லாக் கடனுக்கு அபராத வட்டி வசூல் என்ற பேரில் விவசாயிகளை மிரட்டும் வகையில் செயல் படுகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் நிலைகுலைந்து போயுள்ளனர்.

எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்டூட்ரில் தண்ணீர் திறப்பிற்கு முன் விவசாயக் கடன் நிலுவையைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் அதனை ஒத்திவைத்துவிட்டு புதிய கடன் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும். அதற்கான வகையில் மாநில, மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தை உடன் நடத்திட தமிழக அரசு முன் வரவேண்டும்''.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x