Published : 25 May 2020 02:33 PM
Last Updated : 25 May 2020 02:33 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோதனை மேல் சோதனை! 'கரோனா'வால் ஜப்பான் நாட்டு கடன் கிடைப்பதிலும் சிக்கல் 

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியபோது...

மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு கரோனாவால் ஜப்பான் நாட்டின் வங்கிக் கடன் கிடைக்குமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் நாட்டின் இந்நாள், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நிறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக 22 மாநிலங்களில் இந்த மருத்துவமனையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. ஆரம்பத்தில் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எந்த நகரத்தில் செயல்படுத்துவது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது.

மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர்.

இதில், மதுரை தோப்பூருக்கும், தஞ்சாவூர் செங்கிப்பட்டிக்கும் இடையே எய்ம்ஸ் அமைவதில் போட்டி ஏற்பட்டது. தமிழக அரசு, செங்கிப்பட்டியை பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு விமான நிலையம், ரயில் நிலையம், நான்கு வழிச்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எய்ம்ஸ்-க்கான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட மதுரை தோப்பூரைத் தேர்வு செய்தது. இதைத் தேர்வு செய்ததிலே 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.

அதன்பிறகு, ஒரு வழியாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ல் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் 750 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டியவுடன் தோப்பூரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதிகாரிகள் பல்வேறு துறைரீதியான ஆய்வுகளை நடத்தினார்கள். இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆனால், தமிழகத்திற்கான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் 'ஜெய்கா' (JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. 'ஜெய்கா' நிறுவனம் உயர் அதிகாரிகள் குழு, தோப்பூரில் வந்து ஆய்வு செய்து சென்றது. அவர்கள், தற்போது வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

மத்திய அரசு மட்டும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ரூ.21.20 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை சாலை வசதியை மேம்படுத்தும் பணியைத் தொடங்கியது. கடந்த 2019 ஜூன் மாதம் இறுதியில் தொடங்கிய இந்தப் பணி தற்போது வரை முடியவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் அறிவித்த மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கி நடக்கிறது. இப்பணி முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாற்றுக்கட்டிடத்தில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்தது.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானப் பணியே தொடங்கவில்லை. அதனால், அதைக் காரணம் சொல்லி முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவில்லை. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடம் தேர்வில் மத்திய, மாநில அரசுகளின் முரண்பாடு, அறிவித்த நிலத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் நிலத்தை ஒப்படைப்பு செய்வது, நிதி ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது கடைசியாக கரோனா உருவில் சோதனையைச் சந்தித்துள்ளது.

2022-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியை முடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் ஜப்பான் நாட்டு நிறுவனம், தற்போது வரை நிதி ஒதுக்கவில்லை. கரோனாவால் உலக அளவில் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

கரோனாவில் சரிந்த உலகப் பொருளாதாரம் மீண்டும் மீளவே இன்னும் பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிறுவனம் கூறியபடி கடன் வழங்குமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்படியே அவர்கள் வழங்க முன்வந்தாலும், கரோனா முடிந்து அதற்கான நடைமுறைகள் முடியவே நீண்ட காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும், அதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிடப்பட்ட 2022-ம் ஆண்டில் முடிய வாய்ப்பே இல்லை. அதனால், எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x