Last Updated : 20 Aug, 2015 02:13 PM

 

Published : 20 Aug 2015 02:13 PM
Last Updated : 20 Aug 2015 02:13 PM

ஆப்பிரிக்க நில வளத்தை பயன்படுத்தும் திட்டம்: ஆக.24-ல் அமெரிக்க தூதர் கோவை வேளாண்மை பல்கலை. வருகை

வேளாண்மை படிப்பில் சிறந்து விளங்கும் இந்திய மனித வளத்தைக் கொண்டு ஆப்பிரிக்காவின் நில வளத்தைப் பயன்படுத்துவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா வருகிறார்.

கோவைக்கு விமானம் மூலமாக வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு வரும் அவர், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 90 நிமிட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதர் வருவது முதல்முறை என்பதால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஆப்பிரிக்க கண்டத்தில் வறுமை, தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா அதிக உதவியை செய்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் சாகுபடி நிலப்பரப்பு அதிகம் இருக்கும் நிலையில், அது சரியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.

அந்த நிலத்தை பயன்படுத்துவதற்கான சாகுபடி கூறுகளும், தொழில்நுட்பமும் அங்கு இல்லாததே பிரச்சினை. இதேபோல், நமது நாட்டில் வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் மனித வளத்தைக் கொண்டு ஆப்பிரிக்காவில் உள்ள நிலவளத்தை பயன்படுத்தி வேளாண்மை சாகுபடி செய்து பெரும் உணவு உற்பத்தியை எட்டுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஆப்பிரிக்காவின் உணவு பயன்பாட்டுக்காக அமெரிக்கா செய்யும் செலவு குறையும் என்பதோடு, அந்த கண்டத்தில் விளையும் உணவுப் பொருட்களை உலக நாடுகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

இந்த திட்டம் குறித்த செயல்பாட்டு நடவடிக்கையில் அமெரிக்க இறங்கியுள்ள நிலையில், நாட்டின் முதுபெரும் வேளாண்மை பல்கலைக்கழகமாக விளங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க தூதர் வருகிறார்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x