29 வார கருவைக் கலைக்க அனுமதி கேட்ட இளம் பெண்ணின் கோரிக்கை நிராகரிப்பு: உரிய சிகிச்சை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

29 வார கருவைக் கலைக்க அனுமதி கேட்ட இளம் பெண்ணின் கோரிக்கை நிராகரிப்பு: உரிய சிகிச்சை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தனது கர்ப்பத்தில் வளர்ந்து வரும் முழுமையாக வளர்ச்சியடையாத 29 வார கருவை கலைக்க அனுமதி கேட்ட இளம் பெண்ணின் கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துவிட்டது.

நெல்லை நரிக்குடியைச் சேர்ந்த 24 வயது பெண், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. உடனடியாக நான் கர்ப்பமடைந்தேன். சில வாரங்களில் வயிற்று வலி வந்தது. பரிசோதனையின் போது வயிற்றில் சராசரியாக வளர்ச்சி இல்லாத கரு இருப்பது தெரியவந்தது. அந்த கருவை வளர்ப்பது நல்லது அல்ல என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனவே என் வயிற்றில் வளரும் வளர்ச்சியில்லாத 29 வார கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழு பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வீடியோ கான்பரன்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவக்குழுவினர் கூறும்போது, மனுதாரர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய சிகிச்சை மூலம் மனுதாரர் குழந்தை பெற்றெடுக்கலாம் என்றனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in