Last Updated : 24 May, 2020 01:47 PM

 

Published : 24 May 2020 01:47 PM
Last Updated : 24 May 2020 01:47 PM

புதுச்சேரியில் மின்கட்டணம் ஜூன் 1 முதல் உயர்கிறது

மத்திய அரசு மின்துறையை யூனியன் பிரதேசங்களில் தனியார் மயமாக்கும் அறிவிப்பு வெளியான நிலையில் கரோனா பாதிப்பிலும் புதுச்சேரியின் மின்கட்டணம் வரும் ஜூன் 1 முதல் உயர்கிறது. மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி மின் நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம் (JERC) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியின் தலைவர்கள், சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள், என்.ஜி.ஓக்கள் கலந்துகொண்டு, மின் கட்டணத்தை வரும் நிதியாண்டில் (2020-21) உயர்த்தக் கூடாது என வலியுறுத்தினர். அதை ஏற்ற, புதுச்சேரி அரசும், ஒழுங்குமுறை ஆணையமும், தற்போது மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்தனர்.

தற்போது, மத்திய அரசு, புதிய மின் கொள்கையை மாற்றி அமைத்து, அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார் மயமாக்கி அறிவித்துள்ளது. அத்துடன் கரோனா பாதிப்பால் அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மின் துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அதன் விவரம்:

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 5 பைசாவும், அதிக அளவாக 30 பைசாவும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 10 பைசாவும், அதிகபட்சமாக 20 பைசாவும் அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்தில் 100 யூனிட் வரை ரூ.1.50 என பழைய கட்டணம் தொடர்கிறது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ. 2.50ல் இருந்து ரூ. 2.55 யூனிட் கட்டணமாகியுள்ளது. அதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.35ல் இருந்து ரூ. 4.50 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் கட்டணம் ரூ. 5.60ல் இருந்து ரூ.5.90 ஆகவும் உயர்கிறது.

வரத்தகப் பயன்பாட்டில் நிரந்தரக் கட்டணம் ரூ.130 ஆகிறது. 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.5.60 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.50ல் இருந்து ரூ.6.65ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 7.20ல் இருந்து ரூ.7.40 ஆகவும் அதிகரித்துள்ளது. இக்கட்டண உயர்வு வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது என்று மின்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி முதல்வர் மத்திய மின் பகிர்வு கழகத்தின், மின் கொள்கையை ஏற்க மாட்டோம் என, அறிவித்திருந்தார். ஆனால், மின் துறை நிர்வாகமோ, மாநில அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் கட்டண உயர்வை அறிவித்துள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x