Published : 24 May 2020 01:19 PM
Last Updated : 24 May 2020 01:19 PM

அடுத்த 48 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட தகவல்:

“வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
வட மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது”.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x