Published : 24 May 2020 06:36 AM
Last Updated : 24 May 2020 06:36 AM

கரோனா பரிசோதனைக்காக ஓரிரு நாளில் சென்னைக்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வருகிறது: தமிழகத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலை யில், கரோனா வைரஸ் பரிசோதனைக் காக 1 லட்சம் பிசிஆர் கருவிகள் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 500-க்கு மேற்பட்ட வர்கள் தொற்றுக்கு ஆளாகி வரு கின்றனர். தற்போது மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிப்பு எண் ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி யுள்ளது.

ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்று பிசிஆர் கருவி பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் 41 அரசு மருத்துவமனைகள், 26 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 3.95 லட்சம் பரிசோதனை கள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனை கள் நடக்கின்றன.

வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த மாதம் பல்வேறு நாடுகளில் 11 லட்சம் பிசிஆர் கருவி களுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத் தது. இதில், 2 லட்சம் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. இந்நிலையில், மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் விமானத்தில் சென்னை வரவுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 11 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப் பட்டது. இதுவரை வந்த 2 லட்சம் கருவிகள் ஆய்வகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னைக்கு ஓரிரு நாளில் வரவுள்ளது. தமிழகத்தில் பிசிஆர் கருவிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. வாரத்துக்கு 1 லட்சம் வீதம் பிசிஆர் கருவிகள் வந்து கொண்டிருக்கிறது’’ என்றனர்.

ஒரே நாளில் 759 பேருக்கு தொற்று

இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 429 ஆண்கள், 330 பெண்கள் என மொத்தம் 759 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 710 பேர் ஏற்கெனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதுதவிர மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்த 37 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், லண்டனில் இருந்து வந்த 12 பேருக்கு ஒரு வாரத்துக்கு பின்னர் இரண்டாவது பரிசோதனையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 625 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட் டில் 39 பேருக்கும், திருவள்ளூரில் 17 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக் கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித் துள்ளது.

இவர்களில் இதுவரை 7,491 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 363 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தற்போதைய நிலையில், வைரஸ் பாதிப்புடன் சென்னையில் 5,865 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். அறிகுறிகளுடன் 5,518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் உயிரிழப்பு

சென்னை அரசு பொது மருத் துவமனையில் 68 வயது முதியவர், 54 வயது ஆண், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 75 வயது மூதாட்டி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 53 வயது ஆண் மற்றும் சென்னை தனியார் மருத்துவமனையில் 67 வயது முதியவர் என 5 பேர் கரோனா வைரஸால் நேற்று இறந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிறப்பு கவனம்

சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வரை 9,989 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,768, கோடம்பாக்கத்தில் 1,300, திரு.வி.க.நகரில் 1,079, தேனாம்பேட்டையில் 1,000 என்ற அளவில் நோயாளிகள் உள்ளனர். 
சென்னையில் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, தொற்று அதிகமாக உள்ள 36 வார்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ‘‘மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 36 வார்டுகளில்தான் தொற்று அதிகமாக உள்ளது. அங்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய 2,500 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராயபுரம் பகுதியில், தொற்றால் பாதிக்க வாய்ப்புள்ளவர்கள் 500 பேரை 12 பள்ளிகளில் தங்க வைத்திருக்கிறோம். இப்பகுதிகளில் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளையும் அந்த களப்பணியாளர்கள் மேற்கொள்வர்’’ என தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, ‘‘சென்னையில் 8 லட்சம் முதியோர் உள்ளனர். 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நாள்பட்ட தொற்றா நோய்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x