Published : 23 May 2020 05:44 PM
Last Updated : 23 May 2020 05:44 PM

பழநி பேருந்துநிலையத்தில் பசியால் வாடி உயிருக்குப் போராடிய முதியவர் மீட்பு: உழைத்து வாழ்ந்தவர் ஊரடங்குக்குப் பின் யாசகம் கேட்க மனமில்லாமல் தவிப்பு

பழநியில் உணவின்றி பாசியால் பலநாட்கள் வாடி உயிருக்குப் போராடிய நிலையில் பேருந்துநிலையத்தில் கிடந்த முதியவரை வருவாய்த்துறையினர், போலீஸார் மீட்டு உயிர்பிழைக்கவைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் முதியவர் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்துநிலையத்தில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக உணவுகிடைக்காமல் தவித்து பசிதாங்காமல் மயங்கியநிலையில் படுத்துகிடந்தார்.

கடந்த சில நாட்களாக இவர் மெலிந்ததேகத்துடன் படுத்தநிலையில் இருந்ததை பார்த்து உயிருடன் இருக்கிறாரா என அப்பகுதியில் சென்றுவந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து பழநி சார் ஆட்சியர் உமாவிற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் முதியவரை எழுப்பி விசாரித்தனர்.

சிலநாட்கள் சாப்பிடாதநிலையில் பசி மயக்கத்தில் இருந்ததால் எழுந்து உட்காரமுடியாதநிலையில் அவர் இருந்தது தெரிந்தது. அவரை ஸ்டெச்சரில் தூக்கிவைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதியவரிடம் விசாரித்ததில், தனது பெயர் ஈஸ்வரன் என்றும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் என்றும், தனக்கு குடும்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். பழநியிலுள்ள ஹோட்டல் கடைகளில் வேலைசெய்து பிழைப்பு நடத்திவந்ததாகவும், ஊரடங்கால் வேலை இழந்ததால், பழநி பேருந்துநிலையத்தில் தங்கியிருந்தேன், ஊரடங்கு தொடங்கிய சிலதினங்கள் உணவு கொண்டுவந்து கொடுத்தனர்.

பின்னர் எனக்கு பலநாட்கள் உணவு கிடைக்கவில்லை. பசி என்னை வாட்டியபோதும் உழைத்துச்சாப்பிட்ட எனக்கு யாரிடமும் கேட்டுப்பெறவும் மனம் வரவில்லை. இதனால் சில தினங்கள் உணவின்றி தவித்துவந்ததால் சோர்வுற்றேன், என்றார்.

பசியால் வாடி உயிருக்கு போராடிய முதியவரை தகவல் கிடைத்தவுடன் உடனடியாக காப்பாற்றிய பழநி சார் ஆட்சியர் உமா, பழநி நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி ஆகியோரை செயல்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x