மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு

மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கியது. இப்பகுதி பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. 4, 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில் பிப்.19-ம் தேதி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அகழாய்வு பணிகள் தொடங்கின. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் 56 நாட்களுக்கு பிறகு மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்கின்றனர்.

மொத்தம் 2 ஏக்கரில் 10 குழிகள் தோண்டப்பட உள்ளன. மழைநீர் தேங்கியதால் கொந்தகையில் பணி தொடங்கப்படவில்லை.

தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி தொழிற்சாலைகள் பகுதியாகவும் கொந்தகை ஈமக்காடு பகுதியாகவும் உள்ளன. அகரம், மணலூர் வாழ்விட பகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இப்பணி செப்டம்பர் வரை நடக்கும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in