Published : 23 May 2020 04:24 PM
Last Updated : 23 May 2020 04:24 PM

தங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்: தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து தங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இளைஞரணி கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசியதாக புகாரின்பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதேபோன்று வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் இருவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி. ஆர் பாலு உள்ளிட்ட எம்பிக்கள் குழு திமுவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாக தெரிவித்து பேட்டி அளித்தனர். அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனக்கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பின்னர் தயாநிதிமாறன் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளனர்.

வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்று, சம்பந்தப்பட்ட நீதிபதி விசாரிக்க ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இருவரது மனுக்களையும் நீதிபதி எம். நிர்மல்குமார் விசாரிக்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x